இடையமேலூர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சித்தர் அவர்கள் இந்த பூலோகத்தில் சுமார் 950 வருடங்கள் வாழ்ந்ததாக மகான்கள், சித்தர்கள் கூறுகிறார்கள். ஐயா அவர்களின் பிறப்பு, வளர்ப்பு பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. எப்படி ஈஸ்வரனுடைய அடிப்பாதமும், உச்சியும் பார்க்க முடியாமல் திருமாலும், நான்முகனும் திகைத்தார்களோ, அதேபோல மாயாண்டி சித்தர் பிறப்பு, வளர்ப்பு பற்றி யாரும் அறியவில்லை.
ஆனால் மகான் மாயாண்டி சித்தர் இந்த பூலோகத்தில் 950 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்ததாக சதுரகிரி சித்தர், வெள்ளையங்கிரி, கொல்லிமலையில் வாழும் சித்தர்கள் கூறுகிறார்கள். மகான் மாயாண்டி சித்தர் அவர்கள் இடைய மேலூருக்கு வந்து 100 வருடங்களுக்கு மேல் ஆகிறது. திரு M.M. நடராஜன் அவர்கள் சித்தர் அய்யா அவர்களை சதுரகிரி பக்கம் இருந்து இடைய மேலூருக்கு அழைத்து வந்துள்ளார்கள்.
சித்தர் அய்யா அவர்கள் இடைய மேலூருக்கு வந்து வரத ஈஸ்வர முனிஸ்வரர் கோயிலில் தவம் செய்துகொண்டு, நீண்ட நாட்கள் இருந்துள்ளார்கள். அய்யா நடராசன் அவர்கள் அடிக்கடி சித்தரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, உணவுகள் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளார்கள்.
ஆரம்பகாலத்தில் மாயாண்டி சித்தர் கோவனத்துடன் மட்டுமே இருந்துள்ளார். நடராஜன் அவர்கள் முழு அங்கி தைத்து மாயாண்டி சித்தர் அவர்களுக்கு அணிவித்துள்ளார்கள். அதனால் இடைய மேலூரில் மக்கள் அவரை ‘அங்கிசாமி’ என்றும் ‘அங்குசாமி’ என்றும் அழைத்து வந்தனர்.
சாமி அவர்கள் அவர்களை நாடி வந்தவர்களுக்கு பல அற்புதங்களை செய்துள்ளார்கள். சாமி (சித்தர்) அவர்கள் மிகவும் முக்கியமாக அவர்கள் கூட்டம் சேர்வதைவிரும்பமாட்டார்கள். ஒருவரை பார்த்து பேசிக் கொண்டு இருக்கும்போது, அடுத்த நபர் பார்க்க வந்தால், ‘அப்பா நீ வந்த வேலை முடிந்து விட்டது, நீ போய் பார்க்க வேண்டிய வேலையை செம்மையாக பார்’ என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.
மகான் மாயாண்டி சித்தர் அவர்கள் தன்னை நாடி வருபவர்களை பசியோடு ஒருபோதும் அனுப்பியுள்ளனர். முதலில் பசியை நீக்கி, அதன் பின் அவர்களின் கர்மவினைகளையும், நோய்களையும் நீக்கி அனுப்பி வைப்பார்கள். மகான் மாயாண்டி சித்தர் அவர்கள் 10.01.2007ஆம் ஆண்டு, மார்கழி மாதம், உத்திர நட்சத்திரம் அன்று ஜீவசமாதி அடைந்தார்.
ஒவ்வொரு வருடம் மார்கழி மாதம், உத்திர நட்சத்திரத்தில் மகான் மாயாண்டி சித்தர் அவர்களுக்கு குருபூஜை மூன்று நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் சுமார் 30,000 நபர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படுகிறது.
குரு பூஜை நாட்களில் கணபதி ஹோமம், யாகம், பால்குடம், பொங்கல், கலை நிகழ்ச்சிகள் சீறும் சிறப்புமாக மாயாண்டி சித்தர் அறக்கட்டளை மற்றும் பக்தர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பௌர்ணமி அம்மாவாசை மற்றும் உத்திரம் நட்சத்திரம் அன்று 500 முதல் 1,000 நபர்களுக்கு மகா அன்னதானம் மற்றும் பூஜைகள் மூன்று வேலை அன்னதானமும், காலை, மாலை மகான் சித்தர் அவர்களை நாடி வந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பிரதோஷத்திற்கு 21 அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, வழிபாடு செய்யப்பட்டு பொங்கல், புளியோதரை, சுண்டல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. பௌர்ணமி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் யாகம் மற்றும் மதியம் 1 மணியளவில் 2,500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு சக்தி மார்களை கொண்டு விளக்கு பூஜை நடை பெறுகிறது.
ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சித்தர் ஜோதியான உத்திர நட்சத்திரம் அன்று 500 முதல் 1,000 நபர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் காலை 6.45மணி, மதியம் 1.15மணி, இரவு 7.15 மணிக்கு பூஜைகள், வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தினமும் 100 முதல் 200 ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை அன்னதானமும், காலை, மாலை சன்யாசிகள், பக்தர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு டீ, காபி, பிஸ்கட் வழங்கப்படுகிறது.
மகான் மாயாண்டி சித்தர் அவர்கள் கருதிய வந்தாருக்கு கண்கண்ட தெய்வமாகவும் விளங்கி வருகிறார். அவர்களை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வரங்களையும் வழங்கி வருகிறார்கள். மேலும் மாயாண்டி சித்தர் கோயிலில் தியான மண்டபம், ஆன்மீக அன்பர்கள் தங்குவதற்கு குடில் கட்டப்படுகிறது. ஏற்கனவே பக்தர்கள் அன்னதானம் உண்பதற்காக 500 நபர்கள் உணவு உண்ண அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச திருமணம் நடத்தி, மஹா திருமண மண்டபம் மற்றும் அன்னதான மண்டபமாகக் கட்ட முயற்சி எடுக்கப்படுகிறது. மாயாண்டி சித்தர் கோயிலைச் சுற்றி பிருந்தாவனம் அமைப்பதற்கு மரங்கள், பூச்செடிகள் நடக்கின்றன.
எனவே மாயாண்டி சித்தர் அறக்கட்டளையின் மூலம் கோயில், முதியோர் இல்லம், மருத்துவமனைகள், கல்வி உதவித்தொகை, சீருடை போன்ற உதவிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஸ்ரீலஸ்ரீ மாயாண்டி சித்தர் திருக்கோயில் 13.06.2019 வியாழக்கிழமை இடையமேலூர் கிராமத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகான் மாயாண்டி சித்தர் அவர்கள் அந்த மகாலிங்க ஈஸ்வரனின் பரிபூரண ஆசீர்வாதம் பெற்றவர்கள். 2.6.2020 அன்று வருடாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது, 4,000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.